ஒரு நொடி க(வி)தை - தெய்வீகக் காதல்

காதல் கைகூட நெய்விளக்கு ஏற்றினேன்.


பிரகாரம் சுற்றி வரும் போது கண்களில் தென்பட்டது என் காதலனின் வேண்டுதல்.


கோவில் சுவற்றில் வரையப்பட்ட ஒரு இதயம்.


உள்ளே எங்கள் இருவரின் பெயர்கள்.

ஒரு நொடி க(வி)தை

'மரபுக் கவிதையெல்லாம் யார் சார் படிக்கிறாங்க?


நாலு ஹைக்கு எழுதுங்க...


நல்லா இருந்தா அடுத்த வாரமே பதிக்கிறேன்'.


எழுத முற்ப்பட்டேன்.


என் மூன்றாண்டுப் பட்டப்படிப்பை மூன்றே வரிகளில்.

ஒரு நொடி க(வி)தை

இரயிலுக்காகக் காத்திருந்த நேரத்தில் வானத்தை ரசித்தேன்.

தேய்பிறையா வளர்பிறையா?

நட்சத்திரங்கள் நகர்ந்தனவா?

தெரியவில்லை...

அருந்ததியை தேடித் தலைத் திருப்பினேன்.


தண்டவாளத்தின் தகடு தலையில் இடித்தது.

ஒரு நொடி க(வி)தை

தனியே சந்தித்தான். இளித்தப்படி நீட்டினான்.

மனம் குறுகுறுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்.

கைகள் நடுங்கிய படி வாங்கினேன்.

'தப்பில்லை' என்றான். சிரித்தேன்.

என் பைக்குள்ளே ஒளிந்தது -

நான்முதன்முதலாக வாங்கிய லஞ்சம்.

ஒரு நொடி க(வி)தை

முகஜாடை அவர் போல,


கைகால்கள் குட்டையாய் என் போல,


பாட்டியின் புடவையில் சுற்றி,
கன்னத்தில் மைவைத்திருந்தேன்.


குப்பைத் தொட்டியில் உறங்கும் என் மகன் அழகாய் இருந்தான்.

ஒரு நொடி க(வி)தை

பார்த்தேன், சிரித்தேன்,

பக்கம் வர அழைத்தேன்.

இருபது நிமி்டம், இருநூறு ரூபாய்.

காரியத்தை முடித்தேன்.

ஒரு நொடி க(வி)தை - வாழ்க்கைச்சக்கரம்

பிள்ளை எட்டி உதைத்தான்.

பாசமாய் சிரித்தாள்.

அன்புடன் சுமந்தாள்.

பெற்றெடுத்தாள்.

வளர்த்தாள்.

முதிர்ந்தாள்.

பாரமானாள்.

மீண்டும், பிள்ளை எட்டி உதைத்தான்